கிருஷ்ணகிரி, ஜூன் 12: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2019-20ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின்கீழ், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை (வாய்ப்பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழுநேரப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இதில் சேரலாம். பயிற்சி காலை 3 ஆண்டுகள். பயிற்சி முடிவில் தமிழ்நாடு தேர்வுத்துறையால் தேர்வு நடத்தப்பட்டு, அரசு தேர்வுகள் இயக்குநரால் இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.