ஆத்தூர், ஜூன் 7: ஆத்தூர் அருகே, அனுமதியின்றி நத்தம் ஏரிக்கு வாய்க்கால் அமைக்கும் பணிக்கு, ஆயர்பாடி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆத்தூர் அருகே உள்ள ஆயர்பாடி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய விளைநிலங்களுக்கு முட்டல் ஏரியில் இருந்து பாசன வாய்க்கால் வசிஷ்ட நதி வரை உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரை கொண்டு, பாசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், முட்டல் ஏரியில் இருந்து அனுமதியின்றி கல்லாநத்தம் ஏரிக்கு தண்ணீரை கொண்டு செல்லும் வகையில், சிலர் தன்னிச்சையாக வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முட்டல் ஏரியிலிருந்து அனுமதியின்றி தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டால், ஆயர்பாடி உள்ளிட்ட வாய்க்கால் பாசன விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.