நெல்லை, மே 4: நெல்லை மாவட்ட மாதிரி அரசுப்பள்ளியில் 51 மாணவ, மாணவிகள் எல்கேஜி வகுப்பில் சேர்ந்தனர். தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசுப்பள்ளி மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டு சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் அம்பை ஏவிஆர்எம்வி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி பள்ளியாக கடந்த கல்வியாண்டில் அறிவிக்கப்பட்டது. இந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்காக கடந்த சில மாதங்களாக மாணவர்கள் சேர்க்கை நடந்தது. எல்கேஜி என்பதால் இப்பள்ளியில் எல்கேஜிக்கு முதல் முறையாக மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பள்ளி தலைமையாசிரியர் மேரி மார்கரெட் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக 51 பேரை சேர்த்தனர். மேலும் எல்கேஜி மாணவர்களுக்காக சகல வசதிகளுடன் சிறப்பு வகுப்பு அமைக்கப்பட்டது. மேலும் பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு விளையாட்டு பூங்கா, ஸ்மார்ட் டிவி அமைத்து அதன் மூலம் ரெய்ம்ஸ், பாடம் உள்ளிட்டவை வீடியோ வடிவில் கற்றுக் கொடுப்பது, மாணவர்களுக்கு தனி இருக்கைகள் மற்றும் மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நர்சரி பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.