சுரண்டை, மே 28: சுரண்டை பகுதியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்து சொகுசு காரில் வலம்வந்த போலி பெண் ஆர்ஐயை போலீசார் கைது செய்தனர். சுரண்டை அழகாபுரிபட்டினத்தை சேர்ந்தவர் குமாரி (30). இவர், சுரண்டை போலீசில் அளித்த புகார் மனுவில், சுரண்டை காந்தி பஜார் தெருவில் வசிக்கும் சங்கரசுப்பிரமணியன் மனைவி அழகு ரமா (39) என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார். இதேபோல் சுரண்டையை சேர்ந்த இசக்கிராஜா (25) என்பவரும் தனக்கு அட்டெண்டர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.50 லட்சம் ேமாசடி செய்ததாக புகார் மனு அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அழகுரமாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னை வருவாய் ஆய்வாளர் எனக்கூறி 10க்கும் மேற்பட்டோரிடம் ஆசிரியர் வேலை, வருவாய்த்துறையில் வேலை, எஸ்பி ஆபீசில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் முதல் 20 லட்சம் வரை என கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் போலியாக பணி நியமன ஆணையும் வழங்கியதாக தெரிகிறது.