கிருஷ்ணகிரி, மே 22: செல்போன், தீப்பெட்டி, சிகரெட் கூர்மையான பொருட்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொண்டுவர அனுமதியில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்கள், பொது முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களின் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே அமர வேண்டும். பிற இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. போட்டியிடும் வேட்பாளர் மற்றும் அவரது பொது முகவர் ஆகியோர் மட்டும் போட்டியிடும் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்கு எண்ணும் பகுதிகளுக்கும் செல்ல இயலும். போட்டியிடும் வேட்பாளர் அல்லது முகவர் ஆகியோரில் ஒருவர் மட்டுமே வாக்கு எண்ணும் ஒரு மேசையில் இருப்பதற்கு அனுமதி உண்டு. தேர்தல் நடத்தும் அலுவலரின் மேசைக்கு ஒரு முகவர் நியமிக்கப்படுவார்கள். முகவர்களை நியமனம் செய்வதற்கான படிவம் 18ஐ 3 தினங்களுக்கு முன்பாக வழங்க வேண்டும்.