கடையம், மே 9: ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா, சுடலை மாடசாமி கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஆழ்வார்குறிச்சி ராமநதி ஆற்றின் கரையின் தென்புறம் பிரசித்திப் பெற்ற 141 கிராம சேனைத் தலைவர் சமுதாய வரிதாரர்களுக்கு பாத்தியப்பட்ட காக்கும் பெருமாள் சாஸ்தா, சுடலை மாடசாமி கோயிலில் சித்திரை மாதம் கொடை விழா நடைபெறும். இந்தாண்டு கொடை விழாவை முன்னிட்டு நேற்று கால்நாட்டு வைபவம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். வருகிற 13ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் கும்பம் ஏற்றி குடியழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது.