காரைக்கால், மே 3: காரைக்கால் கடற்கரை சாலைகளில் பழுதான மின் விளக்குகளை உடனே சீரமைக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவுறுத்தியுள்ளார்.காரைக்காலில் கடலோர கிராமங்களின் பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்தும், இவை அமல்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், கலெக்டர் பேசும்போது, கடலோர மீனவ கிராமங்களின் பாதுகாப்பு குறித்து, மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தக் கூடாது. இதனை கடலோரக் காவல்நிலையத்தினர், மீன்வளத்துறையினர் கண்காணிக்கவேண்டும். மீனவர்களுக்கு இதுதொடர்பான சட்டங்களை விளக்கிக் கூறவேண்டும்.