சென்னை: கும்மிடிப்பூண்டி அருகில் எளாவூர் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த 11,840 லிட்டர் எரிசாராயம் திறந்த வெளியில் ஊற்றப்பட்டு தீ வைத்து அழிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, புதுடெல்லி, பீகார், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கனரக வாகனங்களில் காய்கறிகள் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வந்து செல்வதுமாக உள்ளது. இந்நிலையில் இந்த சோதனை சாவடியில் செம்மரக்கட்டை, மணல், எரிசாராயம் உள்ளிட்டவைகள் இரவு நேரங்களில் கடத்தப்படுவதாக கடந்த டிசம்பர் 26ம் தேதி நாமக்கல் ஏ.டி.எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் 10 பேர் கொண்ட போலீசார் அவ்வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 11,840 லிட்டர் எரிசாராயம் லாரியில் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. எனவே சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.