ராஜபாளையம், ஏப். 25: பயறு வகைகளுக்கு டிஏபி கரைசலை தயாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தாமல் விட்டால் பயிர்கள் காய்ந்து விடும் என ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடையில் நெல்லுக்குப்பின் உளுந்து, தட்டைப்பயிறு, அவரை, பாசிப்பயறு, கொள்ளு, துவரை, சோயா, மொச்சை, ஆகிய பயறு சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இவற்றில் பூ பூக்கும் தருணத்தில் 2 சதவீத டிஏபி கரைசல் தெளித்து அதிக மகசூல் பெறலாம். டிஏபி கரைசல் தயாரிப்பதில் அளவு மாறினால் பயன் கிடைக்காது. அளவு கூடினால் பயிர்கள் காய்ந்து விடும். எனவே கரைசல் தயாரிப்பில் சரியான வழி முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அதன்படி 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் இரவில் கரைத்து 4 முறை இந்தக் கரைசலை நன்கு கலக்க வேண்டும். காலையில் கரைசலை கலக்காமல் மேல்புறம் தெளிந்திருப்பதை துணியால் வடிகட்டி எடுத்து இந்தக் கரைசலுடன் 190 லிட்டர் தண்ணீரை கலந்து ஒரு ஏக்கர் செடிக்கு தெளிக்கலாம்.