கிருஷ்ணகிரி, ஏப்.25:தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள உள்ள கே.ஆர்.பி.அணை கட்டப்பட்டு, 65 ஆண்டுகள் முடிந்து விட்டன. இதுவரை இந்த அணை தூர்வாரப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும், மழை காலங்களில் அணையில் மண், சகதி தேங்குவதன் காரணமாக அணையின் கொள்ளளவு குறைந்து, குறைவான அளவே நீர் தேங்கி வருகிறது. இந்த அணையை சுற்றியுள்ள சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், அணையில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக விவசாயத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு அரசு உத்தரவிட வேண்டும். இதற்கான அறிவிப்பை, அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மேலும், அணையில் புதிய மதகு அமைக்கும் பணியை துவங்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.