×

தண்டராம்பட்டு அருகே மனைவியுடன் தகாத உறவு என சந்தேகம் தந்தை தலையை துண்டித்து படுகொலை செய்த மகன் கைது மகனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவரின் வெறிச்செயல்

தண்டராம்பட்டு, ஏப்.24: தண்டராம்பட்டு அருகே தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருக்கலாம் என சந்தேகித்து, தந்தையின் தலையை துண்டித்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் தனபால்(58). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு பிரபு(32), கார்த்திகேயன்(30) என்ற 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவகி இறந்துவிட்டார். கார்த்திகேயன், அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் தனபாலுடன் வசித்து வந்தனர். பிரபு சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், கார்த்திகேயன், ராஜேஸ்வரி தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், ராஜேஸ்வரியின் நடத்தையில் சந்தேகித்து வந்த கார்த்திகேயன் ‘இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை'' எனக்கூறி அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி இரவு, கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், தனது மனைவியின் கண்ணெதிரேலேயே 3 மாதக்குழந்தையை கொடுவாளால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார்.

இதுகுறித்து வானாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தை கொல்லப்பட்டதால் மனமுடைந்த ராஜேஸ்வரி, அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையில், கடந்த 16ம் தேதி தனபால், தனது மகன் கார்த்திகேயனை ஜாமீனில் எடுத்தார். சிறையில் இருந்து வெளியே வந்த கார்த்திகேயனுக்கு, தந்தை தனபாலுக்கும், தனது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்துவந்த அவர், நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன் வாசலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த தனபாலை கோடாரியால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை துண்டாகி தனபால் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.பின்னர் கார்த்திகேயன், வானாபுரம் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம், ‘எனது தந்தையை கோடாரியால் வெட்டி, தலையை துண்டித்து கொலை செய்துவிட்டேன். என்னை கைது செய்யுங்கள்'' எனக்கூறினார்.இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த, டிஎஸ்பி ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தனபால் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தை சந்தேகத்தால் தந்தையை, மகனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : head ,Thantharampottam ,
× RELATED ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்