தாம்பரம்: தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் முதலை புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் பேராசிரியர் சாலை அருகே ஏரி உள்ளது. இந்த ஏரி அருகே வீடுகள் மற்றும் கடைகள் அதிகளவில் உள்ளன. இந்த ஏரியில் 7க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஏரியில் இருந்து 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று, ஏரியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை.