சென்னை: சென்னை அண்ணாநகர் பகுதியில் பணக்கார இளைஞர்களை குறிவைத்து போதை ஸ்டாம்ப் மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்த நபரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் ெசய்யப்பட்டது. சென்னை அண்ணாநகர் கிழக்கு முகப்பேரில் உள்ள நீச்சல் குளம் அருகே போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு ேபாலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு மப்டியில் சென்ற போலீசார் பல மணி நேரம் ரகசியமாக நீச்சல் குளம் பகுதியை கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர், அப்பகுதியில் தன் மொபட்டை நிறுத்தினார். சிறிது நேரத்தில், அருகில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சாரைசாரையாக வந்து அவரிடம் பணத்தை கொடுத்து ரகசியமாக பொருட்களை வாங்கிச் சென்றனர். இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், மொபட்டில் வந்த நபரை பிடித்து சோதனையிட்டனர்.