சூளகிரி அருகே மேலுமலையில் தலையில் கல்லை போட்டு இளம்பெண் படுகொலை

சூளகிரி, ஏப்.21:  சூளகிரி அருகே மேலுமலையில், தலையில் கல்லை போட்டு இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கிருஷ்ணகிரி  மாவட்டம், சூளகிரி அடுத்த மேலுமலையில் இருந்து, பிஜிதுர்க்கம் செல்லும்  வழியில் வனப்பகுதி உள்ளது. நேற்று காலை அந்த வனப்பகுதியில் உள்ள பாறையில்,  தேங்கி இருந்த தண்ணீரில் பெண் சடலமாக கிடந்தார். அவரது தலை தண்ணீரில் அமுக்கி மூழ்கடிக்கப்பட்டும், தலை மீது பெரிய கல்லை போடப்பட்டும் இருந்தது. இதை கண்ட அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள், இது குறித்து விஏஓ ராஜசேகரிடம் தகவல் தெரிவித்தனர். அவர் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த டிஎஸ்பி மீனாட்சி, சூளகிரி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டு கிடந்த இளம்பெண் பச்சை நிறத்தில் மேலாடையும், நீல  நிறத்தில் லெக்கின்ஸ்  மற்றும் காலில் சாக்ஸ் அணிந்திருந்தார். அவரது இடதுகையில் பிரேம் என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. கால்  விரலில் மெட்டி அணிந்திருந்தார். ஆனால், அவரை பற்றி வேறு எந்த விவரங்களும் தெரியவில்லை. இதையடுத்து, அவரது சடலத்தை மீட்ட போலீசார்  பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கள்ளக்காதல் விவகாரத்தில், யாராவது அவரை அங்கு அழைத்து வந்து கொலை  செய்தனரா? என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

Related Stories: