ராஜபத்ரகாளி அம்மன் கோயில் கொடைவிழா குற்றாலத்தில் முளைப்பாரி ஊர்வலம்

தென்காசி, ஏப்.18:  குற்றாலம் ராஜபத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழாவில் நேற்று முன்தினம் முளைப்பாரி, அக்னிசட்டி, பத்ரகாளி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குற்றாலநாதசுவாமி கோயிலுக்கு கிழக்கே வடக்கு முகமாக அமைந்துள்ள  ராஜபத்ரகாளி, விநாயகர், அகஸ்தியர், பைரவர், கருப்பசாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொடை விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கொடை விழா கடந்த 9ம் தேதி கால்நட்டுதலுடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது.15ம் தேதி மாலை  குற்றாலம் மெயினருவியிலிருந்து புனித நீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தன. கொடை விழாவான நேற்று முன்தினம் காலையில் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் குற்றாலம் மெயினருவியிலிருந்து பக்தர்கள் முளைப்பாரி, அக்னிசட்டி, பூப்பெட்டி, பத்ரகாளி வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர். நள்ளிரவில் சாமபூஜைகள் நடந்தது. நேற்று காலை காலையில் மஞ்சள்நீராட்டு, பொங்கலிடுதல் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் தங்கராஜ், ராமர், சோமசுந்தரம், பிச்சையா, வீட்டுவசதி சங்க தலைவர் சுரேஷ் மற்றும் பக்தர்கள்  செய்திருந்தனர்.

Related Stories: