மேல்மருவத்தூர், ஏப்.8: யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடினர். இதில் பங்காரு அடிகளார் ₹11 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். யுகாதி வருடப் பிறப்பை முன்னிட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடம் மலர்களால் அலங்கரிப்பட்டிருந்தது. ஆங்காங்கே அலங்கார பதாகைகள் தெலுங்கு, தமிழ், ஆங்கில மொழிகளில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு யுகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்பட்டது. காலை 10.30 மணியளவில் சித்தர்பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு, ஆந்திரா மற்றும் தெலங்கானா பக்தர்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். தொடர்ந்து 11 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. பகல் 11.45 மணியளவில் ஆன்மிக மண்டபத்தில் சிறப்பு மேடை நிகழ்ச்சி நடந்தது.