சென்னை: தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், கிறிஸ்தவ போதகர் மோகனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று காலை 12 மணி அளவில் சின்னமலை புதுவாழ்வு கிறிஸ்தவ தேவாலயம் சென்ற அவர் அங்கு தேவாலய தலைவரும் பாஸ்டருமான மோகனை சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் அவரிடம் வாழ்த்தும் பெற்றார். அப்போது, சிறுபான்மையினருக்கு ஆதரவாக திமுக எப்போதும் இருக்கும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி அளித்தார். அதை தொடர்ந்து ஜெபம் செய்து சிறுபான்மையினர் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் என்று போதகர் மோகன் கூறினார். இதையடுத்து பகல் 1 மணி அளவில் வேளச்சேரி அடுத்த தரமணி ஹேமா திருமண மண்டபத்தில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.