விருதுநகர், மார்ச் 22: விருதுநகரில் ராமமூர்த்தி ரோடு ரயில்வே மேம்பால பணிகள் நிறைவுற்ற நிலையில் மின்விளக்கு, பாலத்தின் அடிப்பகுதி தரைத்தளம் சமன்படுத்தும் பணிகளை காரணம் காட்டி பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் ஒப்பந்த நிறுவனம் மூடி வைத்திருந்தது. மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலத்தை திறக்க வேண்டுமென ‘தினகரனில்’ மார்ச் 15ல் செய்தி வெளியானது. அன்றைய தினமே சிறுவாகனங்கள் செல்லும் அளவிற்கு பாலம் பாதி அளவிற்கு திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாலத்தில் டூவீலர்கள், ஆட்டோ, வேன், ஜீப்புகள் சென்று வந்த நிலையில் நேற்று காலை போலீசார் திடீரென போக்குவரத்தை தடை செய்தனர்.
இந்த தகவல் அறிந்த திமுக எம்எல்ஏக்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், மாநில நிர்வாகி சுப்பாராஜ் ஆகியோர் எஸ்பி ராஜராஜன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி பாலத்தை போக்குவரத்திற்கு திறக்குமாறு தெரிவித்தனர். கோரிக்கையை ஏற்று பாலம் திறக்கப்பட்டது.