நெய்வேலி, மார்ச் 22: நெய்வேலி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நெய்வேலி வேலுடையான் பட்டு பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்து வந்தது. நேற்றுமுன்தினம் திருக்கல்யாண உற்சவம், நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெய்வேலி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-27ல் பெருமாள் கோயிலில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம், அலகு குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.