கிருஷ்ணகிரி, மார்ச் 22: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக காருண்யா சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை, நேற்று முன்தினம் அதன் நிறுவனர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் காருண்யா சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது விபரம் வருமாறு:
பெயர்- காருண்யா சுப்பிரமணியம்.
பிறந்த தேதி- 30.6.1969.
படிப்பு- பி.எஸ்சி.,
கட்சி பதவி- மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்.
சொந்த ஊர்- சென்னை.
தனி ஆளாக காரில் 10 ஆயிரத்து 218 கி.மீ. தூரம் பயணம் செய்ததற்கான கின்னஸ் சாதனையாளர் விருது. கர்நாடகா மாநில பார்வையற்றோர் தேசிய அமைப்பின் இணை செயலாளர்(2005-2013). மோட்டார் பந்தய ஆர்வலர்.
அரசு மருத்துவமனை அருகே
ஆண் சிசு சடலம் மீட்பு
ஓசூர், மார்ச் 22: ஓசூர் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் அருகே, நேற்று காலை பிறந்த சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு சடலம் கிடந்தது. நாய்கள் கடித்து குதறிய நிலையில் சிதைந்து போன நிலையில் காணப்பட்ட உடலை கண்டு, அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். இதுகுறித்த தவலின்பேரில், டவுன் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர். குழந்தையின் உடலை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு மருத்துவமனையின் பின்பக்க சுற்றுச்சுவர் அருகே வீசிச் சென்றுள்ளனர். தெருநாய்கள் பிளாஸ்டிக் கவரில் இருந்த குழந்தையின் தலை, முகம், கை கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்களைக் கடித்துள்ளன. இந்த குழந்தை வளர்ச்சி அடையாமல் கர்ப்பத்திலேயே இறந்து பிறந்ததா அல்லது தகாத உறவின் மூலம் பிறந்த குழந்தையை வளர்க்க விரும்பாமல் வீசி விட்டு சென்றனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.