பெரம்பூர்: பெரம்பூர் தொகுதியில், திமுக மாவட்ட நிர்வாகியை தாக்கிய அதிமுகவினர் மீது நடவடிக்கை கோரி திமுகவினர் காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். தமிழகத்தில் நாடாளுமன்றம் தேர்தல், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு முத்தமிழ் நகரில் வாக்காளர்களிடம் அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்காளர் அடையாள அட்டை, தொலைபேசி எண் ஆகியவற்றை வாங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த திமுகவினர் மாவட்ட சிறுபாண்மை அணி அமைப்பாளர் சல்மான்பாய் தட்டி கேட்டதற்கு அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் டேவிட் ஞானசேகரன், சல்மான் பாயை அடித்ததாக கூறப்படுகிறது.