×

ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்க்க, விற்க தடை

தர்மபுரி, மார்ச் 21: ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்க்கவும், மற்றும் விற்பனை செய்யவும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் மலர்விழி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் கட்லா, ரோகு, மிருகால் மற்றும் சீனப் பெருங்கெண்டை மீன் வகைகளான வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதாக்கெண்டை மற்றும் மரபியல் மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் குஞ்சுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.  மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இம்மீன் இனங்கள் இதர வகை மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை அதி தீவிரமாக இரையாக உண்ணும் தன்மை உடையதால் நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும் அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்துவிடும். எனவே, நமது நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழியும் வாய்ப்புள்ளது. மேலும் இம்மீன் இனங்கள் காற்றில் உள்ள பிராணவாயுவினை சுவாசிக்கும் தன்மையும் மற்றும் மிகக் குறைந்த ஆழமுள்ள நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடையது. இம்மீன்கள்; பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு அவற்றின் மரபியலை சிதைத்து ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் பல்பெருக்கமடைய வல்லமையுடையது. மழை மற்றும் பெரு வெள்ள காலங்களில் இம்மீன் இனங்கள் வளர்ப்பு செய்யும் குளங்களில் இருந்து தப்பி வெளியேற வாய்ப்பு உள்ளதாலும், தப்பித்து செல்லும் மீன்கள் உள்நாட்டு நீர்நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து பல்பெருக்கமடைந்து அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை தவிர பிற மீன்கள் இல்லாமல்; உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  எனவே மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்வது, வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : African ,
× RELATED பர்கினோ பாசோவில் அரசுக்கு எதிராக...