சூளகிரி, மார்ச் 20: சூளகிரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச்செயல்களில் பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட லாரி, வேன், ஆட்டோ மற்றும் சுமார் 400 க்கும் மேற்பட்ட டூவீலர்கள் ஆண்டுக்கணக்கில் கிடப்பதால் துருப்பிடித்து செடி கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 25 டூவீலர்கள் மற்றும் ஒரு ஆட்டோ எரிந்து நாசமானது.
இதுகுறித்த தகவலின்பேரில் டிஎஸ்பிக்கள் சுரேஷ்குமார், மீனாட்சி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், காவல்நிலையம் பின்புறம் உள்ள புறம்போக்கு நிலத்தில் வேளாண் துறை சார்பில் கட்டிடம் கட்டும் பணி நடக்கிறது. அங்கு காவலாளியாக பணிபுரியும் சூளகிரி எப்சி நகரை சேர்ந்த வீரப்பன் (55) என்பவர், நிலத்தில் காய்ந்து கிடந்த புற்களுக்கு தீ வைத்துள்ளார். இந்த தீ காற்றில் பரவி வாகனங்களில் பற்றியது தெரியவந்தது. இதையடுத்து வீரப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.