அம்பை, மார்ச் 12: அம்பை நகராட்சிக்கு உட்பட்ட ஆற்றுச்சாலை காசிநாதர் கோயில் வழியாக கல்லிடைக்குறிச்சிக்கு செல்லும் சிமென்ட் சாலை உள்ளிட்ட நகராட்சி பகுதியின் பல்வேறு இடங்களில் உள்ள தரமான சாலைகள் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்துவருகின்றன. சாலைகள் போட்டு சில ஆண்டுகள் ஆன நிலையில் அதில் எந்தவிதப் பழுதும் இல்லை. இந்நிலையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.18ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பயன்பாட்டில் இருந்து வரும் தரமான சாலைகள் அனைத்தையும் உடைத்து புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் சட்டவிரோத செயலை நிறுத்த வேண்டும். தினமும் மாசில்லா சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். இரவில் சரிவர எரியாத சாலை விளக்குகள் அனைத்தையும் சரிசெய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் சுகாதாரமின்றி பாதிப்படைந்துள்ள மரகதாம்பிகை நகரில் கழிவுநீரோடை அமைக்க வேண்டும். அங்கு நடைபெற உள்ள விரிவாக்கப்பணியின் போது நூற்றாண்டுகளை கடந்த மரங்கள் மற்றும் குடிநீர் குழாய்களை சேதமடையாது பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் மற்றும் மரகதாம்பிகை நகர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் அம்பை நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். போராட்டத்திற்கு திமுக நகரச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தனர்.