அம்பை, பிப். 26: அம்பையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி வழங்கும் விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முருகையா பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி ரூ. 2 ஆயிரம் வழங்கியதற்கான சான்றிதழ் வழங்கினார். மேலும் பயிர்களை சேதப்படுத்தும் படைப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த உதவும் மெட்டாரைசியம், இனக்கவர்ச்சிப் பொறி, விளக்குப் பொறிகள், புளுரோட்டஸ் கிட்டுகள் மற்றும் காய்கறி விதைகளை இலவசமாக வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் ரவீந்திரன், வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் சுஜித், உதவி தொழில் நுட்ப மேலாளர் தங்க சரவணன், மாவட்ட துணை செயலாளர் செவல் முத்துசாமி, மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர்ஷா, ஒன்றிய செயலர் செல்வராஜ், நகர செயலர்கள் ராமையா, கண்ணன், மாவட்ட பிரதிநிதி சுடலை, முன்னாள் கவுன்சிலர் விஜயபாலாஜி, வழக்கறிஞரணி கோமதிசங்கர், ராஜசேகர், அர்பன் வங்கி துணைத்தலைவர் பிராங்கிளின், மினி சூப்பர் மார்க்கட் தலைவர் சங்கரநாராயணன், துணைத்தலைவர் அசோக், சிங்கை அருண், மாநில பேச்சாளர் மீனாட்சி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பயனாளிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் இளங்கோ நன்றி கூறினார்.