கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை

சென்னை: தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி வந்தவர் விநாயகம். அதே பிளாட்பாரத்தில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வீரபிள்ளைகாடு கிராமத்தை சேர்ந்த உதயகுமாரும் தங்கி வந்தார். கடந்த 2017ம் ஆண்டு பிளாட்பாரத்தில் படுப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் உதயகுமார், விநாயகத்தை கீழே தள்ளி, தலையில் கல்லை போட்டு கொலை  செய்துள்ளார். இதை பார்த்த மோகன் என்பவர் அளித்த தகவலின்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் அசோகன் ஆஜராகி வாதிட்டார். விசாரணையில் உதயகுமார் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து நீதிபதி, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: