சென்னை: விளம்பர பேனர்கள் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அரசியல் கட்சிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் அச்சக சங்க உறுப்பினர்களுடனான கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தலைமையில் நேற்று நடந்தது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் விளம்பரப் பேனர்கள் அமைக்க உரிய படிவத்தை பூர்த்தி செய்து அனுமதி கோரும் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தடையில்லா சான்று, அமைக்கப்பட உள்ள இடம் தனியார் கட்டிடமாகவோ, அரசு நிறுவனம் சார்ந்த கட்டிடமாகவோ இருந்தால் அவர்களிடமிருந்து அதற்கான தடையில்லா சான்று, அமைக்கப்பட உள்ள இடத்திற்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பேனருக்கும் அனுமதி கட்டணமாக ரூ.200 மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.50 செலுத்த வேண்டும்.