சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் நடைமேடைகள் உள்ளன. அதில் நடைமேடை 54 மற்றும் 55க்கு இடைப்பட்ட இடத்தில் விமானங்களுக்கு சார்ஜ் ஏற்றக்கூடிய கருவிகள் பொருத்தப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4.30 அளவில் அந்த வாகனத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி பறந்தது. பின்னர் திடீரென சிறிது நேரத்தில் அதில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறி வாகனம் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை கண்ட விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, விமான நிலைய தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து 3 தீயணைப்பு வானங்கள் விரைந்து வந்தன. அதில், ஒரு வாகனம் தீப்பற்றி எரிந்த வாகனத்தை அணைக்கும் பணியில் ஈடுபட மற்ற 2 வாகனங்கள் அருகில் உள்ள வாகனங்கள் மற்றும் விமானங்கள் மீது தீ பரவாமல் இருக்க தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். பின்னர் அரை மணி நேரத்தில் வாகனத்தில் பிடித்த தீ முழுவதும் அணைக்கப்பட்டது.