நாமகிரிப்பேட்டை, பிப்.20: நான்கு மாதமாக 16வது வார்டில் சீரான குடிநீர் விநியோகம் ெசய்யாததை கண்டித்து, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள், நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி 16வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் கடந்த 4 மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் பல முறை பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விவசாய கிணறுகள், மற்ற வார்டு பகுதிக்கு ெசன்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர். தவிர, காசு கொடுத்து கேன் குடிநீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை 16வது வார்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், சீரான குடிநீர் வழங்கக்கோரி, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அங்கு செயல்அலுவலர் இல்லாததால், பேரூராட்சி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதனால் சமாதானமடைந்த பெண்கள், அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த திடீர் தர்ணா போராட்டத்தால் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.