சென்னை: ராயபுரம் தம்புலேன் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் சிவகுமார் (38). சிபிசிஐடியில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். குடும்ப தகராறில் இவர் நேற்று முன்தினம் தனது மனைவி ராதிகாவை (30) சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து ராதிகா அளித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* திருச்சி உறையூரை சேர்ந்த ஜெகநாதன் (29), ராமாபுரத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், நேற்று மாலை நண்பர்களுடன் பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது, ராட்சத அலை சிக்கி இறந்தார். * மதுரவாயல் சக்கரபாணி நகரை சேர்ந்த அவினாஷ் (21), கல்லூரி மாணவன். இவர், நேற்று முன்தினம் மாலை அம்பத்தூர் பட்டரைவாக்கம் அருகே பைக்கில் சென்றபோது பின்னால் வந்த மற்றொரு பைக் மோதி இறந்தார்.
* திருசூலம் பகுதியை சேர்ந்த பரிதா (20). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தி.நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் (42) என்பவர் காதலிப்பதாக தொல்லை செய்துள்ளார். இதை பரிதா கண்டித்ததால், அவரது கையை பிடித்து இழுத்து சேலையை உருவி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை தட்டிக்கேட்ட அவரது அண்ணனையும் தாக்கியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் ஜெயராமனை கைது செய்தனர். * அனகாபுத்தூர் மேட்டுத் தெருவை சேர்ந்த பிரசன்னகுமார் (22), கல்லூரி மாணவன். இவர், நாகல்கேணி அருகே பைக்கில் சென்றபோது, டிரெய்லர் லாரி மோதி இறந்தார். * தண்டையார்பேட்டை அப்பாசாமி தோட்டத்தை சேர்ந்த ரூக்கேஸ் குமார்(30). சென்னை மாநகராட்சி இளைநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி சுகன்யா (25) என்பவரை காணவில்லை, என போலீசில் புகார் அளித்துள்ளார். * ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (53). ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. இவருடைய மகள் கோயம்புத்தூர் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய மகளுக்கும், பெண் காவலருக்கும் ஓரினசேர்க்கை இருப்பதாகவும், தனது மகளை மீட்டுத்தர கோரியும் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.