கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன கற்கள் மூலம் பழுக்கவைத்த 3 டன் சப்போட்டா பழம் பறிமுதல்:9 கிலோ ரசாயன கற்களும் சிக்கியது

அண்ணாநகர்: கோயம்பேடு பழ மார்க்கெட்டில் பழங்களை ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படுவதாக கிடைத்த தகவலில் பேரில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரசாயன கற்கள் மூலம் பழுக்க  வைத்த 3 டன் சப்போட்டா பழம் மற்றும் 9 கிலோ ரசாயன கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு கோயம்பேடு பழ மார்க்கெட்டில் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், பழங்களை விரைவாக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக கோயம்பேடு பழ  மார்க்கெட்டில் வியாபாரிகள் ரசாயன கற்களை வைத்து, பழங்களை பழுக்க வைத்து விற்பதாக  அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து பழ மார்க்கெட்டில் நேற்று மாலை திடீர் சோதனை செய்தனர். அப்போது, 3 கடைகளில் ரசாயன கற்கள் வைத்து  சப்போட்டா பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, சுமார் 3 டன் சப்போட்டா பழங்கள் மற்றும் 9 கிலோ ரசாயன கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: