சென்னை: போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் வரிசை எண்ணுடன் கூடிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு பறிமுதல் செய்யப்படும், என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்து 682 இருசக்கர வாகனங்கள், 90 மூன்று சக்கர வாகனங்கள், 103 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 875 வாகனங்கள் காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் ரூ.2.21 கோடி வருவாய் கிடைத்தது. இதில் சேவைக் கட்டணம் நீங்கலாக மீதம் உள்ள ரூ.2.13 கோடியில் சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்காக ரூ.1.60 வழங்கப்பட்டது.