மாத்தூர் 200அடி சாலையில் புதிதாக சுங்கச்சாவடி திறக்க எதிர்ப்பு: லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்: மாத்தூர் 200 அடி சாலையில் புதிதாக சுங்கச்சாவடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணலி மாத்தூர் அருகே மாதவரம் 200 அடி சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுநல சங்கங்கள், லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள்  சங்கம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைந்தால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும். கனரக வாகன ஓட்டிகள் கூடுதல் சுங்கவரி  கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும், என்பதால் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால், அதையும் மீறி சுங்கச்சாவடி கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணிகள் முடிந்து, இன்று முதல் சுங்கச்சாவடி இயங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அறிந்த லாரி உரிமையாளர்கள்  மற்றும்  ஓட்டுநர்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், சுங்கச்சாவடியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை லோக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டு, இதற்கான ஆலோசனை கூட்டம்  மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், சென்னை லோக்கல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் வெங்கடபதி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்ப்பை மீறி சுங்கச்சாவடி அமைத்துள்ள மத்திய அரசை கண்டித்து லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: