கடையம், பிப். 15: ஆலங்குளம் தொகுதியில் பீடி தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பூங்கோதை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 5 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எனது தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்களது குழந்தைகளுக்கு கல்வித்தொகையாக 1 முதல் 5ம் வகுப்பு வரை ரூ.750, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.900, உயர்நிலை படிப்பவர்களுக்கு ரூ.1,750, மேல்நிலை மாணவர்களுக்கு ரூ.2000, கலைக்கல்லூரி மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம், தொழிற்சார் கல்வி புரபசனல் கல்லூரியில் படிப்பவர்களுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படும். இந்த கல்வி உதவித்தொகை கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.