காவேரிப்பட்டணம், பிப்.12: காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பொதுமக்களிடையே பிரசாரம் செய்தனர்.
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வெங்கட்ராஜூலு தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் சீனிவாசன், தேசிய பசுமைப்படை ஒன்றிய செயலர் பவுன்ராஜ் முன்னிலை வகித்தனர். பேரணியில் தேசிய பசுமைப்படை, தேசிய மாணவர் படை, பாரத சாரணர் சங்கத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.