ஓசூரில் பட்டப்பகலில் துணிகரம் கார் கண்ணாடியை உடைத்து ₹1.70 லட்சம் திருட்டு

ஓசூர், பிப்.1:   கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ராமசந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பா மகன் மூர்த்தி(26). இவர் நேற்று காலை, பாகலூர் சாலையில் உள்ள ஆந்திரா வங்கியில் பணம் எடுப்பதற்காக காரில் வந்துள்ளார். பின்பு வங்கியில் காசோலையை கொடுத்து, ₹1.70 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு கவரில் பணத்தை சுற்றி கார் சீட்டில் வைத்துள்ளார். அதன் பின்னர் காரை ஓட்டிச் சென்ற மூர்த்தி, பாகலூர் சாலையில் உள்ள பிரபல தனியார் கடை முன்பு காரை நிறுத்தி விட்டு, பொருட்கள் வாங்கச்சென்றார்.  இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ₹1.70 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடி விட்டனர். பொருட்கள் வாங்கிக்கொண்டு காரின் அருகில் வந்த மூர்த்தி கார் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து அட்கோ போலீசில் புகார் செய்தார். இதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: