சென்னை: சென்னையில் சிறுவணிகம் செய்யும் வியாபாரிகளுக்கு 350 நாட்களில் திரும்ப செலுத்தும் வகையில், 10 ஆயிரம் கடன் வழங்கப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, பாண்டிபஜார் கிளையில் 5 பேருக்கு சம்பளக் கடன் 17 லட்சமும், 7 பேருக்கு பணிபுரியும் மகளிர் கடன் 44 லட்சமும், 138 பேருக்கு சிறுவணிக கடன் 29.55 லட்சமும், 14 சுயஉதவிக் குழுக்களுக்கு 28 லட்சமும், 4 மாற்றுத்திறனாளிக்கு 1.75 லட்சமும் என மொத்தம் 168 பயனாளிகளுக்கு 1 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் சிறப்பு கடன் உதவிகள் வழங்கினார்கள்.