கிருஷ்ணகிரி, ஜன.10: சேசுராஜபுரத்தில் பல்லவன் கிராம வங்கி புதிய கிளையை ஐவிடிபி நிறுவனர் திறந்து வைத்தார். கிராமப்புற மக்கள் நலனுக்காக, 15 மாவட்டங்களில் 289 கிளைகளுடன் பல்லவன் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கி சேவை எட்டாத தொலைதூர கிராமங்களிலும், மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளிலும், இந்த வங்கி கிளைகளை துவக்கி, அனைத்து மக்களும் வங்கி சேவையை பெற துணையாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள தொலைதூர மலை கிராமமான நாட்றாம்பாளையம், ஆரோக்கியபுரம், மோட்ராகி, கெம்பகரை, கொடகரை, பலிகுண்டு மற்றும் மஞ்சுமலை ஆகிய மலை கிராமங்களில் வாழும் சுமார் 15 ஆயிரம் மலைவாழ் மக்கள், வங்கி சேவையை பெறும் வகையில், இந்த கிராமங்களின் மையப்பகுதியான சேசுராஜபுரத்தில், நாட்றாம்பாளையம் கிளை பல்லவன் கிராம வங்கி துவங்கப்பட்டது.