ஓசூர், டிச.12: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்நாடு கோழியின ஆராய்ச்சி கல்லூரி மற்றும் கால்நடை பண்ணை உள்ளது. இங்கு நாட்டுக்கோழி, காடை வளர்ப்பு குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தனர். கலெக்டர் பிரபாகர், கல்லூரி முதல்வர் டாக்டர் மணி, கால்நடை பராமரிப்பு துணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன் ஆகியோரும் பங்கேற்றனர். கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஓசூரில் கோழி இன ஆராய்ச்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவர்கள் கோழிகள் பற்றி அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளும் வகையிலும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கோழிகளை உற்பத்தி செய்வதற்கும், உற்பத்தி செய்த கோழிகளை எப்படி வளர்ப்பது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையிலும் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.