தென்காசி, டிச. 11: குற்றாலத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி ஏராளமான பெண்கள் அருவியில் நீராடி சுமங்கலி பூஜை நடத்தினர். கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரமான நேற்று கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டி அதிகாலையிலேயே சுமங்கலி பெண்கள் குற்றாலம் மெயினருவியில் நீராடி அருகில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் திருமாங்கல்யத்தில் குங்குமமிட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர். தொடர்ந்து குற்றாலநாதர் கோயில் அருகேயுள்ள கன்னிவிநாயகர் கோயில், செண்பக விநாயகர் கோயிலில் 11 முறை சுற்றி வந்து பிரகாரத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பழம், மஞ்சள் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். இதில் பெண்கள் திரளாகப் பங்கேற்றனர்.