திசையன்விளை, டிச. 6: நெல்லை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் விஏஓக்கள் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணைய வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். இ-அடங்கலில் டிஜிட்டல் கையொப்பமிட்டு கிராம நிர்வாக அலுவலர்களே வழங்க அனுமதிக்க வேண்டும். உட்பிரிவு இனங்களில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரைப்படி பட்டா மாற்றம் செய்யும் வகையில் மென்பொருளை வடிவமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள், தாலுகா அலுவலகங்களில் நேற்று மாலை முதல் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திசையன்விளை தாசில்தார் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு விஏஓக்கள் சங்க மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தனர். விஏஓக்கள் இசக்கிமுத்து (கஸ்தூரிரெங்கபுரம்), அய்யாத்துரை (கண்ணநல்லூர்), ஆனந்த் ஆவுடையப்பன் (ராமகிருஷ்ணாபுரம்), மணிகண்டன் (விஜயநாராயணம் 1), மகா அரிச்சந்திரன் (விஜயநாராயணம் 2), சண்முகராஜா (விஜயநாராயணம் 3), முத்துமாரி (உறுமன்குளம்), சத்யவாணி (குமாரபுரம்), செம்மலர் (குட்டம்), இசக்கியம்மாள் (கரைச்சுத்துப்புதூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.