சிவகாசி, நவ. 29: வெம்பக்கோட்டை-ஆலங்குளம் மார்க்கத்தில், சாலையோர தடுப்புகளில் விபத்து எச்சரிக்கை குறித்த ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளத்திற்கு செல்லும் சாலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டது. இந்த சாலை வழியாக கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, திருவேங்கடம் ஆகிய ஊர்களில் இருந்து ஆலங்குளத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை இருப்பதால், இந்த சாலை வழியாக தினசரி அதிகமான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இது தவிர பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலை பல இடங்களில் குறுகளாகவும், வளைவுகளாகவும் உள்ளன. சாலை குறுகலாகவும், வளைவாகவும் உள்ள இடங்களில் இருபுறமும் இரும்பு தடுப்பு அமைத்துள்ளனர். ஆனால், தடுப்புககளில் விபத்து எச்சரிக்கை குறித்த ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை. இரவு நேரங்களில் வரும் வாகனங்களில் வளைவுகளில் விபத்தில் சிக்குகின்றன.