திருவொற்றியூர்: குடிசை மாற்று வாரியம், நிலத்தை கையகப்படுத்தியதை கண்டித்து, தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பட்டா வழங்க வேண்டும் என கோஷமிட்டதால், மாதவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 32வது வார்டுக்கு உட்பட்ட வில்லிவாக்கம் சாலை லட்சுமிபுரத்தில் பஜனை கோயில் தெரு, அசோகா தெரு, அம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிகள் அனைத்தும் அரசு கிராம நத்தம் நிலங்களாகும். இங்கு குடியிருக்கும் மக்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பலமுறை இப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஆனாலும், அவர்களுக்கான நிலப்பட்டா குறித்து இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இந்த இடங்களை தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அதிகாரிகள், மக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் கையகப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாதவரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டந்னர்.