காரைக்கால்,நவ.2: நெய்வேலியிலிருந்து காரைக்கால் துணை மின்நிலையத்திற்கு நேரடியாக மின்சாரம் பெறும் பணி விரைவில் முடியவுள்ளது என, புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு சார்பில், 64வது விடுதலை நாள் விழா, நேற்று காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். விழாவில், எம்எல்ஏ அசனா, கலெக்டர் கேசவன், போலீஸ் எஸ்.பிகள் மாரிமுத்து, வம்சிதரரெட்டி மற்றும் தியாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர் கமலக்கண்ணன் சமாதான புறாவை பறக்கவிட்டு பேசியது: புதுச்சேரியில் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், என பல ஐரோப்பியர்கள் வியாபாரத்தலம் அமைத்தாலும், பிரஞ்சுக்காரர்கள் மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து 1964 முதல் ஆட்சி புரிந்து வந்தது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது, பிரஞ்சு அரசின் நிர்வாகத்தை எதிர்த்து சிறுசிறு போராட்டங்கள் நிகழ்ந்தாலும், பிரிட்டிஷ் இந்திய பகுதியில் காந்திஜி தலைமையில் சுதந்திர போராட்டம் தீவிரடைந்தபோது, புதுச்சேரியிலும் சுதந்திர போராட்டம் தொடங்கியது. பல்வேறு கட்ட போரட்டத்திற்கு பிறகு, 1954 நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி மாநிலம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது.