குளச்சல், அக்.23: பிரின்ஸ் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆண்டு முழுவதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 2014 ம் ஆண்டு முதல் கன்னியாகுமரி - பெங்களூர் ரயிலின் பெட்டிகளை கொண்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. இதனை ரத்து செய்துவிட்டு தனித்தனி ரயில் பெட்டிகளை கொண்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தனி ரயில் பெட்டிகளாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை,திருச்சி ஆகிய தென் மாவட்ட பயணிகள் பெரும் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் ரயில் நிலைய இடநெருக்கடி காரணமாக இந்த ரயிலின் பெயரை மாற்றி கொச்சுவேலி வரை நீட்டிக்க திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.