அம்பத்தூர், அக். 16: சென்னை மாநகராட்சி 95வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் ஆடுதொட்டி முதல் ஐ.சி.எப் போக்குவரத்து சிக்னல் வரை மாநகராட்சி சார்பில், ₹18.60 லட்சம் செலவில் சாலையோர பூங்கா கடந்த 2008ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனை அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அழகிய பூச்செடிகளுடன் அமைக்கபட்ட இந்த பூங்கா பார்வையாளர்களை கவர்ந்தது. ஆனால், நாளடைவில் அதிகாரிகள் இதனை பராமரிக்காததால், பூச்செடிகள் தண்ணீரின்றி கருகியது. தற்போது, பூங்காவில் முட்செடிகள், செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதை பயன்படுத்தி சிலர், பூங்கா இடத்தை ஆக்கிரமித்து டிபன் கடை, கரும்புசாறு, பழச்சாறு கடைகளை அமைத்துள்ளனர். இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அந்த இடத்தில் நிரந்தரமாக கடைகளை கட்ட ஆக்கிரமிப்பாளர்கள் முயன்று வருகின்றனர். மேலும் சிலர் தங்களது வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி பார்க்கிங் பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர்.