ஜெயலலிதா ஆன்மா இருக்கும் வரை அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது

தர்மபுரி, ஜூன் 21:  முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா ஆன்மா இருக்கும் வரை, அதிமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என, பென்னாகரம் அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார். பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில், காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம், பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் வேலுமணி தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி தலைவர் வெற்றிவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மதியழகன், முன்னாள் பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பாபு, நிர்வாகிகள் தவுலத்பாஷா, குலாம் முஸ்தபா, மீரா வஜ்ஜிரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

 கூட்டத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஎஸ் விஜய், ஜெயலலிதா பேரவை முன்னாள் மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன், தலைமைக்கழக பேச்சாளர் கடலூர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு, காவிரி நதிநீர் பிரச்னையில் சட்ட போராட்டம் நடத்தி, அதிமுக அரசு வெற்றி பெற்றது குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

 தமிழகத்தில் பெரிய திட்டங்களை செயல்படுத்தும் திராணி, அதிமுகவை தவிர வேறு யாருக்கும் கிடையாது. தமிழகத்தில் பெரிய திட்டங்கள் அனைத்தும், அதிமுக ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்டன.

தமிழகத்தில் தொடர்ந்து மக்களுக்காக போராடி கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். அதிமுக அரசு தொடர்ந்து சட்ட போராட்டங்களை நடத்தி, காவிரி நதிநீர் ஆணையத்தை அமைக்க செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்சி ஓரிரு மாதங்களில் கவிழ்ந்து விடும் என்று, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டிடிவி தினகரன், தமிழக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் ஆன்மா இருக்கும் வரை, அதிமுக அரசை யாராலும் அசைக்க முடியாது. இவ்வாறு அவர் ேபசினார். நகர இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Related Stories: