கிருஷ்ணகிரி அருகே மேய்ச்சல் நிலங்களில் மண் அள்ளி விற்பனை: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விவசாயிகள் பயன்படுத்தி வரும் மேய்ச்சல் நிலத்தை அபகரிப்பதை தடுக்க வேண்டும் என, 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். கிருஷ்ணகிரி அருகே, திப்பனப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன், வி.சி.க பிரமுகர் மாதேஷ் ஆகியோர் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

 கிருஷ்ணகிரி அருகே ஜிஞ்சுப்பள்ளி வருவாய் கிராமத்தில், திப்பனப்பள்ளி, ஜிஞ்சுப்பள்ளி பஞ்சாயத்துகள் உள்ளன. இங்குள்ள 200 ஏக்கர் மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலத்தில், சுமார் 40 ஏக்கர் அளவிலான நிலங்களில் ஊர் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த புறம்போக்கு நிலத்தை ஊர் கவுண்டர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் ஏலம் விட்டு கற்கள், மண் வெட்டி எடுத்து விற்கின்றனர். விவசாயிகள் பயன்படுத்தும் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்படுகின்றனர். அவர்கள் சொல்வதை கேட்காவிட்டால் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, அபராதம் விதிக்கின்றனர்.

விவசாயம் செய்து வரும் நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்காக ஆர்.ஐ., மூலம் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வரும் ஏழை விவசாயிகள் தொடர்ந்து இந்த நிலங்களில் விவசாயம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். அரசு திட்டப்பணிகளுக்காக இந்த நிலங்களை கோரும் பட்சத்தில், விவசாயிகள் நிலங்களை வழங்கவும் தயாராக உள்ளனர். எனவே, மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலத்தை கேட்டு மிரட்டுபவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: