நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்: 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சாத்தூர்: சாத்தூரில் நள்ளிரவில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்டு டிரைவர் பயணிகளை கீழே இறக்கியதால் 14 பேர் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தில் கோவில்பட்டி-மதுரை நான்குவழிச்சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கோயம்புத்தூருக்கு நேற்றிரவு 9.30 மணியளவில் ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் அகிலன் (45) ஓட்டி வந்தார். பஸ்சில் 14 பயணிகள் இருந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நள்ளிரவு 12.45 மணியளவில் பஸ் வந்த போது, திடீரென டமால் என்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து டிரைவர் அகிலன் பஸ்சை உடனடியாக சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து பஸ்சை சுற்றிபார்த்தார். அப்போது பஸ்சின் பின்புறம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து துரிதமாக செயல்பட்டு பஸ்சில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பயணிகளை எழுப்பி கீழே இறக்கினார்.

பயணிகள் இறங்கிய சிறிதுநேரத்தில் பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. அவசர அவசரமாக இறங்கிய பயணிகள் தங்களது உடமைகளை எடுக்க முடியாததால் அவைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் இந்த தீவிபத்தில் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.  டிரைவர் துரிதமாக செயல்பட்டதால் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் கோவில்பட்டி-மதுரை நான்குவழிச் சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து காரணம் என்ன?: எளிதில் வெடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் பஸ்சில் லக்கேஜாக எடுத்து செல்லப்பட்டதா அல்லது சாலையோரம் கிடந்த மர்ம பொருள் வெடித்து பஸ்சில் தீ பிடித்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: