காரைக்கால்: காரைக்காலில் உயர் மின்னழுத்தம் காரணமாக 200 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், மிக்ஸி போன்ற மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளன. காரைக்கால் மாவட்டம் தளத்திரு கிராமத்தில் உள்ள 350க்கும் மேற்பட்ட வீடுகளில் 2000துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு மின்மாற்றியில் ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக திடீரென 200க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. டிவி, பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, மின் மோட்டார், ஃபேன் என அடுத்தடுத்து மின் உபயோக பொருட்கள் பழுதடைந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள் சுமார் 5 லட்சம் ரூபாய் பொருட்கள் சேதமடைந்திருப்பதாக கவலை தெரிவித்தனர்.
வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுதடைந்து இருப்பதால் செய்வதறியாது தவிக்கும் கிராம மக்கள் சேதமடைந்த பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.